அக்காவை பெண் பார்க்க வந்தவர் தங்கையை பலாத்காரம் செய்தார்: ஐதராபாத்தில் நடந்த அட்டூழியம்

சித்தூர்: அக்காவை பெண் பார்க்க வந்தபோது வீட்டில் தனியாக இருந்த அவரது தங்கையை தாக்கி பலாத்காரம் செய்த வாலிபர், அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக்கொண்டு தப்பினார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த 24, 21 வயதுள்ள சகோதரிகள் இருவர் ஐதராபாத் அடுத்த நிஜாமாபாத் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வரன்பார்க்கும் இணையதளத்தில் மணமகன் தேவை என்று அக்கா பதிவு செய்திருந்தார். இதை பார்த்த விசாகப்பட்டினம் மாவட்டம், நதிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெய்சந்து(29) என்பவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

கடந்த மாதம் 30ம்தேதி ஜெய்சந்து பெண் பார்க்க வருவதாக அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அன்று காலை அந்த பெண் பியூட்டி பார்லர் சென்று வருவதாக தங்கையிடம் கூறி சென்றுள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த ஜெய்சந்து, அந்த பெண்ணின் தங்கையை பார்த்து மயங்கி உள்ளார். அவரிடம் நைசாக பேச்சுக்கொடுத்தபடி, திடீரென அவரை சரமாரியாக தாக்கினாராம். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அந்த பெண், தனது தங்கை சுயநினைவின்றி, ஆடைகள் களைந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், மயக்கம் தெளிந்து எழுந்த தங்கையிடம் கேட்டபோது, நடந்த சம்பவத்தை கூறினாராம்.

இதுகுறித்து இருவரும் நிஜாமாபாத் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்நாடக மாநிலம், குல்பர்கா பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் பதுங்கி இருந்த ஜெய்சந்துவை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து தங்க செயின், மோதிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: