கார்டூம்: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் பஹிர் தொழில்பேட்டை பகுதியில் கண்ணாடி துகள்களை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செராமிக் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தொழிற்சாலைக்குள் நின்று கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதில் பல இந்தியர்களும் இறந்துள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சூடானில் நாட்டில் பீங்கான் ஆலையில் 50 இந்தியர்கள் உட்பட பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆலையில் சிலிண்டர் டேங்கர் வெடித்து விபத்தானது. இதில், மொத்தம் 23 பேர் இறந்துள்ளதாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அங்குள்ள இந்திய தூதரகம் அளித்துள்ள தகவலிலும் 23 பேர் இறந்ததாக கூறினாலும், அதில் எத்தனை இந்தியர்கள் உயிரிழந்தனர் என்பதை தெரிவிக்கவில்லை. இந்த விபத்து குறித்து அந்நாட்டு அரசின் விசாரணையில், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் விபத்தை தடுக்க முடியாமல் போனது தெரியவந்துள்ளது.