துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷரப் (வயது 76). இவர் கடந்த 2007-ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசமைப்பு சட்டத்தை அவர் முடக்கிவைத்தார். இது பெரும் எதிர்ப்புக்கு வழி வகுத்தது. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டில் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 2016-ம் ஆண்டு, மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறப்போவதாக கூறி முஷரப் துபாய்க்கு சென்றார். பின்னர் அவர் நாடு திரும்பவே இல்லை. இந்த நிலையில், சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த முஷரப் மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பை வரும் 28-ம் தேதி வெளியிடுவதாக அந்த கோர்ட்டு அறிவித்தது. இதனை எதிர்த்து, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.