அரசு ஊழியரை தாக்கி தாலி செயின் பறிப்பு

பல்லாவரம்: சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்தியவாணி (55). இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் கணக்காளராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவ விடுப்பில்  பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், லட்சுமி நகரில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த சத்தியவாணி, கதவை திறந்து வைத்து விட்டு, வீட்டின் வராண்டாவில் நின்றிருந்தார். அப்போது இவரது வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர், தான் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்துள்ளதாகவும், தனக்கு  குடிக்க தண்ணீர் தருமாறு கூறினான். அதனை உண்மை என்று நம்பி, சத்தியவாணி தண்ணீர் கொண்டு வருவதற்காக சமையல் அறை நோக்கி சென்றார்.

அப்போது பின்னாலேயே வந்த கொள்ளையன், கண்ணிமைக்கும் நேரத்தில் சத்தியவாணியை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க தாலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில்  கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: