சென்னை: இடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றி கிடைக்கவும், சமூகநீதி முழுமையாக நிலை நாட்டப்படவும் அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசு ஊழியர்களின் (பணி நிபந்தனை) சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு எதிராக நடைபெற்ற வழக்கில், அதிமுக அரசின், “சட்ட அறிவுப் பற்றாக்குறையால்” - இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படும் ‘பணி மூப்புக் கொள்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. சமூகநீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசின் சட்டத் தோல்விக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது, இந்த அரசின் வாடிக்கை என்பது, இந்த வழக்கிலும் உறுதியாகி விட்டது, வேதனை தருவதாக அமைந்திருக்கிறது. திமுக அரசு இருந்த போது-’100 பாயிண்ட் ரோஸ்டர் முறை’, ‘200’ பாயிண்ட் ரோஸ்டர் முறையாக உயர்த்தப்பட்டு-69 சதவீத இடஒதுக்கீட்டின் பலன் முழுமையாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.