விருதுநகர்: வரத்து குறைவால் விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் விலை மூட்டைக்கு ரூ.1000 வரை விலை உயர்ந்துள்ளது. நல்லெண்ணெய் டின்னுக்கு ரூ.165, பாமாயில் டின்னுக்கு ரூ.45 விலை உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, மலேசியாவில் பாமாயில் டன் 665 டாலராக உயர்வு ஆகிய காரணங்களால், கடந்த வாரம் பாமாயில் டின்னுக்கு ரூ.80 விலை உயர்ந்தது. இதேபோல், நடப்பு வாரத்திலும் டின்னுக்கு ரூ.45 அதிகரித்துள்ளது. இதன்படி, கடந்த வாரம் ரூ.1150க்கு விற்ற பாமாயில் டின் (15 கிலோ), இந்த வாரம் ரூ.1195க்கு விற்பனையானது.
எள்ளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கடந்த வாரம் ரூ.4373க்கு விற்ற நல்லெண்ணெய் டின் ரூ.165 விலை அதிகரித்து ரூ.4538க்கு விற்பனையானது. ஆந்திராவில் மழையால் புதுவத்தல் வரத்து குறைவு மற்றும் ஏசி குடோன்களில் வத்தல் இருப்பு குறைவு ஆகிய காரணங்களால், குவிண்டாலுக்கு ரூ.1000 வரை வத்தல் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, கடந்த வாரம் ரூ.15 ஆயிரம் முதல் 15 ஆயிரத்து 800க்கு விற்ற குண்டூர் புதுவத்தல் இந்த வாரம் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.
நிலக்கடலை பருப்பு விலை குறைவுகுஜராத், ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் திண்டிவனம், வந்தவாசி பகுதிகளில் இருந்து நிலக்கடலை வரத்து தொடங்கி இருப்பதால் நிலக்கடலைப் பருப்பு (80 கிலோ) மூட்டைக்கு ரூ.500 விலை குறைந்துள்ளது. இதன்படி, கடந்த வாரம் ரூ.6500க்கு விற்ற நிலக்கடலை பருப்பு மூட்டை, இந்த வாரம் ரூ.6000க்கு விற்பனையானது. நிலக்கடலை பருப்பு விலை சரிவால், கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.70 விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.2320க்கு விற்ற நல்லெண்ணெய் டின் (15 கிலோ), இந்த வாரம் ரூ.2250க்கு விற்பனையானது. கடலைப்பிண்ணாக்கு (100 கிலோ) மூட்டைக்கு ரூ.400 குறைந்து ரூ.4200க்கு விற்பனையானது.