திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அருகே நேற்று ஆளில்லா விமானம் (டிரோன்) பறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அதிக பாதுகாப்பு மிகுந்த விமான நிலையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், சர்வதேச சுற்றுலாத்தலமான கோவளம், பத்மநாபசுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆளில்லா விமானம் (டிரோன்) பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த டிரோனை பறக்க விட்டது யார் என்பது குறித்தும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை.