மின்வாரிய தலைமையகத்தில் கால்சென்டர் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் : புகார் அளிக்க முடியாமல் மக்கள் அவதி

சென்னை : தமிழகம் முழுவதும் 2.60 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தை அனல், நீர், காற்றாலை, சூரியசக்தி போன்றவற்றின் மூலம் தயாரித்து மின்வாரியம் வழங்குகிறது. ஒருசில பகுதிகளில் தரமற்ற சாதனங்கள் பயன்படுத்தல், மழை, அடிக்கடி தோண்டப்படும் குழிகளால் மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வாரியத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வகையில் 1912 என்ற எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆங்காங்கு மின்தடை நீக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்ஒருபகுதியாக சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்தடை நீக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ேடார் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதைக்கண்டித்து நேற்று அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘எங்களுக்கு கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக சம்பளம் முறையாக வழங்கப்படுவதில்லை. தற்ேபாது தீபாவளி வரவுள்ளது. எனவே உடனடியாக வழங்க வேண்டும் எனக்கேட்டோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதற்கு ஒரு முடிவை ஏற்படுத்தும் வகையில் அழைப்புகளை ஏற்காமல் காத்திருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டோம். நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று காலை 10 மணி வரை ேபாராட்டம் நடந்தது. பிறகு அதிகாரிகள் திங்கட்கிழமைக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம். சம்பளம் கிடைக்காவிட்டால், தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும். எங்களின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்’ என்றனர்.

ஏற்கனவே சிக்கல்

பல்வேறு இடங்களில் உள்ள மின்தடை நீக்க மையங்களுக்கு நுகர்வோர் புகார் அளிக்க தொடர்பு கொண்டால் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இச்சிக்கல் மிகுந்து காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories: