சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: நடைபெற உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் தொகுதி வாக்காளர்கள் குறிப்பாக தொழிலாளர்கள் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு வாக்களித்திட வேண்டும். அது தான் தமிழகத்தின் எதிர் கால விடிவிற்கு ஓர் அச்சாரமாக அமைந்திடும். விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்கள் பெரும்பாலானோர் கட்டுமான தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆவார். இவர்களுக்காக திமுக ஆட்சியில் தலைவர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட 17 நலவாரியங்கள் தற்போது முறையாக செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் அடியோடு முடங்கியுள்ளதால் லட்சகணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.