3 கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடியில் 3 கொலை வழக்குகளில்  தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.சென்னை வியாசர்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் எஸ்.ஐ பிரேம் உள்ளிட்ட  போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக சென்ற பைக்கை நிறுத்துமாறு கூறியும் நிற்காமல் சென்றது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அதனை துரத்தினர். அந்த நபர் வியாசர்பாடி எஸ்.எம் நகர் பகுதியில் வேகமாக சென்று வேகத்தடையில் மோதி கீழே விழுந்தார். இதனால் அவரது கை முறிந்தது.

விசாரணையில் வியாசர்பாடி பி.கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பாடி சரவணனின்  மகன் சஞ்சய் குமார் (26) என்பதும், இவர் பிரபல ரவுடி பொக்கை ரவி,  பிரபாகரன், கொடுங்கையூர் குமார் ஆகியோரை  கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கத்திகள், ஒரு பைக், 2 செல்போனை போலீசார் கைப்பற்றினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: