செப். 27-30 வரை கணினி வழி முதுகலை ஆசிரியர் தேர்வு தேர்வு எழுதும் மையத்தை 300 கி.மீ. தூரத்தில் அமைப்பதா?: தேர்வர்கள் குற்றச்சாட்டு

சென்னை: முதுநிலை ஆசிரியர் தேர்வில் 300 கி.மீட்டருக்கு அப்பால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதை மாற்ற வேண்டும் என்றும் தேர்வர்கள் கூறியுள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதற்காக 154 தேர்வு மையங்களில் கணினி  வழியில் இந்த தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 18ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என டிஆர்பி அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வர்கள் விண்ணப்பித்த மாவட்டத்தில் இருந்து 300 கி.மீ  தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தேர்வர்கள் கூறியதாவது:

கணினி வழியாக முதுகலை ஆசிரியர் தேர்வு நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. டிஆர்பி சார்பில் கணினி வழியாக முதல்முறையாக ஜூன் 23ம் தேதி நடந்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வில், 10 மாவட்டங்களில் சர்வர் சரிவர  இயங்கவில்லை. இதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்தது. ஆனால் சில மையங்களில் மட்டுமே மறு தேர்வு நடத்தப்பட்டது. கணினி வழியில் தேர்வு நடத்த டிஆர்பியிடம் போதுமான கட்டமைப்பு இல்லை.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வு ஹால்டிக்கெட்டில் வேறு ஊர்களில் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு விருப்ப மாவட்டங்களாக 3 மாவட்டங்களை  தேர்வு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை விருப்ப மாவட்டமாக தேர்வு செய்தவருக்கு கரூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.கரூரை விருப்ப மாவட்டமாக தேர்வு செய்தவருக்கு சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்துள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்த ஒருவர் தேர்வு எழுத விருப்ப மாவட்டங்களாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சியை தேர்வு செய்துள்ளார்.  ஆனால் அவருக்கு திருப்பூரில் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளனர். இது தேவையில்லாமல் தேர்வர்களை அலைக்கழிக்கும் செயல். எவ்வளவு பேர் சில 100 கி.மீ தூரம் சென்று தேர்வு எழுதுவார்கள் என்று தெரியவில்ைல. தேர்வு மையம் ஒதுக்கீடு  செய்பவர்கள் இதுதொடர்பாக சிந்தித்து தேர்வு மையம் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். இவ்வாறு தேர்வர்கள் தெரிவித்தனர்.

50 கி.மீட்டருக்குள் தேர்வு மையம்

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் கூறியதாவது:தேர்வு எழுதும் மையங்கள் சுமார் 300 கிலோ மீட்டரிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.  தேர்வு தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ளதால், தேர்வரின் சொந்த ஊரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவுக்குள் தேர்வு மையம் இருப்பதை டிஆர்பி உறுதிப்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர்  சங்க மாநில தலைவர் இளமாறன் கூறினார்.

Related Stories: