நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாதது ஏன்?: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை டிடிவி.தினகரன் புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அமமுக வட்டாரங்களில் இருந்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ல் நடந்த நாடாளுமன்ற மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால், தினகரனை நம்பி வந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர். தோல்வியால்  சோர்ந்துபோய் இருந்த கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறாமல் யார் வேண்டுமானாலும் கட்சியை விட்டு செல்லலாம் என தினகரன் கூறினார்.  இதனால், விரக்தி அடைந்து முக்கிய நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் மாற்றுக்கட்சியில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும் அமமுக போட்டியிடாது என தினகரன் அறிவித்தார். உட்கட்சி பிரச்னை  முற்றிய நிலையில் கட்சி கூட்டங்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதையும் தினகரன் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அவ்வப்போது மட்டும் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு  வந்தார்.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை மேல் அதிருப்தி தெரிவித்து புதுச்சேரியை சேர்ந்த 40 முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். கட்சியில் இருந்து ஏராளமான முக்கிய நிர்வாகிகள் விலகியதன் எதிரொலியாக கட்சி  நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. சசிகலாவின் நம்பிக்கைக்கு உரிய நபராக உள்ள புகழேந்தியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரன் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தநிலையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, நாங்குநேரி தொகுதியில் காங்கிரசும் போட்டியிட உள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட  விரும்புவோர் விருப்ப மனுவும் கொடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அமமுகவும் இடைத்தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என தினகரன் அறிவித்துள்ளார். தினகரனின் இந்த அறிவிப்பிற்கு  பின்னால் தேர்தலில் போட்டியிட யாரும் விருப்பம் தெரிவிக்காததே காரணம் என கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. இதுகுறித்து அமமுக வட்டாரங்கள் கூறியதாவது:  ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்த பலரும் மாற்றுக்கட்சிக்கு சென்றுவிட்டனர். இதனால், பலவேறு பதவிகள் காலியாகவே இருந்து வந்தது. காலி பதவிகளுக்கு தற்போது  தான் ஆட்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, தினகரனை நம்பி வந்த 18 பேரும் தங்களுடைய பதவியை இழந்தனர். தேர்தலிலும் படுதோல்வியை அடைந்தனர். அதில் இருந்தே பலர் ஏமாற்றத்துடனே இருந்து வருகின்றனர்.    

அதிமுகவுடன் எப்போது வேண்டுமானாலும் அமமுகவை இணைத்துவிடலாம் என்ற ஒரு பேச்சும் கட்சியில் நிலவி வருகிறது. இதனால், ஒரு திடமான மனநிலையில் யாரும் இல்லை. புதிய நிர்வாகிகள் கூட களத்தில் இறங்கி வேலை செய்ய  தயார் நிலையில் இல்லை. ஏற்கனவே, பரிசுப்பெட்டி சின்னத்தையும் மக்களிடத்தில் கொண்டுசெல்ல முடியவில்லை. வேலூர் தேர்தலுக்கு பிறகு கட்சி நிர்வாகிகளிடையே விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், தலைமையை நம்பி போட்டியிட யாரும் விருப்பம்  தெரிவிக்காததாலேயே விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலிலும் ஓட்டுக்களை குறைவாக வாங்கினால் இருக்கிறவர்களும் ஓடிவிடுவார்கள் என்று  கருதியே, அவர் போட்டியிடவில்லை. இவ்வாறு கூறினர். தினகரனை நம்பி வந்த 18 பேரும் தங்களுடைய பதவியை இழந்தனர். தேர்தலிலும் படுதோல்வியை அடைந்தனர். அதில் இருந்தே பலர் ஏமாற்றத்துடனே இருந்து வருகின்றனர்.

Related Stories: