மேட்டூர் அணையின் நீர்வரத்து 17,000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக குறைந்தது: பாசனத்திற்கான தண்ணீர் திறப்பும் குறைப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், பாசனத்திற்கான தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 7ம் தேதி, அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், காவிரியின் நீர்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளிலிருந்து, காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது.

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படிப்பாக குறைந்தது. இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட உபரி நீர், கடந்த 14ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 14,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று தண்ணீர் திறப்பு 12,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 16,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Related Stories: