புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சில மாடல்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, பிற நிறுவனங்களையம் இந்தியாவில் அதிகமாக உற்பத்தி மேற்கொள்ளச்செய்து இந்தியாவை எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி மையமாக மாற்ற மத்திய அரசு விரும்புகிறது. இதுதொடர்பாக ஆப்பிள் உட்பட பல்வேறு எலக்ட்ரானிக் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதலீடு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. இந்நிலையில், சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் நிறுவனம், சாம்சங் நிறுவனம் ஆகியவை இந்தியாவில் தங்களது மொபைல் போன் தொழிற்சாலைகளை மேலும் நிறுவி கூடுதலாக இங்கு உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அரசு விரும்புகிறது.