வதோதரா: குஜராத்தில் ஊட்டச்சத்து அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய தலைவர் திலீப் ரத் தொடங்கி வைத்தார். இந்த பிரசாரத்தின்போது. அனந்த் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக பால் விநியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய தலைவர் திலீப் ரத் கூறுகையில், “ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, திங்கள் தொடங்கி இந்த வாரம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்கப்படும். 200 மிலி பதப்படுத்தப்பட்ட பால் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதுவரை 7 மாநிலங்களில் 48 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.