சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஐகோர்ட் பாதுகாப்புக்குழு ஆலோசனை

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற பாதுகாப்புக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவின் மிகவும் பாரம்பரியமிக்க உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றமும் ஒன்றாகும்.  இந்த வளாகத்திற்குள் நுழைவதற்கு 7 நுழைவு வாயில்கள் உள்ளன. உயர் நீதிமன்ற கட்டிடத்திற்குள் செல்வதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அனுமதி பெற வேண்டும். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 5 பிரதான இடங்களில் சோதனை மையங்களை அமைத்துள்ளனர். கடுமையான சோதனைக்குப் பிறகே வக்கீல்களும், வழக்கு தொடர்பவர்களும் இந்த வளாகத்திற்குள் நுழைய முடியும்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 30ம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என்று தலைமை பதிவாளர் அலுவலகத்திற்கு மேற்கு டெல்லி மோதி நகர் சி-13, முதல் தளம், சுதர்ஸன் பார்க் என்ற முகவரியிலிருந்து ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்ற பெயரில் நேற்று மர்ம கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில், “ நான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவை சார்ந்தவன். அடிக்கடி எனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டிருப்பேன். அதற்கேற்ப எனது மொபைல் எண்ணையும் மாற்றிக்கொண்டிருப்பேன். வரும் 30ம் தேதி நானும் எனது மகனும் சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்திற்கு பல இடங்களில் குண்டுகளை வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி உயர்நீதிமன்ற பதிவாளர் சென்னை காவல்துறை ஆணையருக்கும், மத்திய தொழில் பாதுகாப்புப்படைக்கும் இந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், காவல் துறை உயர் அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படை கமாண்டர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், நீதிபதிகள் வினீத் கோத்தகரி, மணிக்குமார், சசிதரன், ரவிச்சந்திரபாபு, கிருபாகரன், பி.என். பிரகாஷ் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: