கோதாவரி: ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் ஏற்கனவே 12 பேர் பலியான நிலையில், மேலும் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கண்டிபோச்சம் கோவிலுக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள், பாப்பிகொண்டலு என்ற சுற்றுலாத்தலத்திற்கு செல்வதற்காக கோதாவரி ஆற்றில் படகில் பயணித்துள்ளனர். ராயல் வசிஸ்டா என்ற சுற்றுலாப் படகில் ஓட்டுநர், ஊழியர்கள் மற்றும் பயணிகள் என 60க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், தேவிப்பட்டிணம் அடுத்த கச்சனூர் என்ற இடத்தில் அந்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றதாலும், திடீரென ஏற்பட்ட நீரின் சுழற்சியாலும் கட்டுப்பாட்டை இழந்த படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.