தர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து

தர்மசாலா: இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளிடையே தர்மசாலாவில் நேற்று நடைபெற இருந்த முதல் டி20 போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி தர்மசாலா, இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இங்கு கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், நேற்றும் கனமழை கொட்டியதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடங்கும் என ரசிகர்களும் குடை பிடித்தபடி ஆவலுடன் காத்திருந்தனர். எனினும், மழை தொடர்ந்து பெய்ததால் மைதானத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியது. இதையடுத்து, டாஸ் கூட போடப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி மொகாலியில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

Related Stories: