புழல் : சென்னை கொளத்தூர், தெற்கு மாடவீதி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (45). பெயின்டர். கடந்த 11ம் தேதி இரவு பாஸ்கர் அதே பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயில் அருகே நடந்து வந்தபோது அவ்வழியாக வந்த 5 பேர் கும்பல் திடீரென பாஸ்கரை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த பாஸ்கரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பாஸ்கர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனை நேற்று ராஜமங்கலம் போலீசார் பிடித்தனர். அவனிடம் கொலைக்கான காரணம் என்ன? உடன் இருந்த நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.