டெல்டா மாவட்டங்களில் 3 நாட்களாக மழை நீடிப்பு: பெரம்பலூர் மருதையாற்றில் திடீர் வெள்ளம்... வீடுகளில் தண்ணீர் புகுந்தது

பெரம்பலூர்: திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஆற்றோரம் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக வேளாண்மை தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டதோடு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீருக்கே திண்டாடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. லேசான சூறைக்காற்று வீச துவங்கினாலும் பின்னர் காற்று எதிர்ப்பின்றி கனமழை கொட்டி தீர்த்தது. மழை நீர் தெருக்களில் ஆறு போல் பாய்ந்தது.இந்த தண்ணீர் துறைமங்கலம் அவ்வையார் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இதையடுத்து 20ம் தேதி மாவட்ட அளவில் பெய்த 350 மில்லி மீட்டர் மழையில் பெரம்பலூரில் மட்டும் 38 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது3வது நாளாக நேற்றும் பிற்பகலில் பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. கிராமப்புறங்களில்கனமழை கொட்டியது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அடைமழை பெய்ததால் நேற்று பிற்பகல் கீழக்கணவாய், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி பகுதிகளில் உள்ள பச்சைமலையில் இருந்து உற்பத்தியாகும் மருதையாற்றில் நேற்று மாலை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரெங்கநாதபுரம், புதுநடுவலூர், நொச்சியம், விளாமுத்தூர் வழியாக செல்லும் மருதையாற்றில் கரைகள் ததும்ப வெள்ளம் பெருகி ஓடியது. புதுநடுவலூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அதிகரித்த மழைநீர் கரைகளை கடந்து தெருக்களிலும் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. புதுநடுவலூர் தென்புறம் உள்ள மலையடிவாரத்தில் வெள்ளம் வயல்களை கடந்து ஆதிதிராவிடர்தெரு,

அருந்ததியர் தெருக்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். நேற்றும் அடைமழை பெய்ததால் அப்பகுதியில் மாலை 6 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆற்றோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எப்போது வெள்ளம் வருமோ, வீட்டை சேதப்படுத்திவிடுமோ என்ற அச்சத்துடனே வீடுகளில் கண்விழித்து இருந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் மேலும் வெள்ளம் வரும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கி கொள்ள வருவாய்த்துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

திருச்சி, தஞ்சை

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நேற்று 3வது நாளாக பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் , கும்பகோணம் பகுதிகளில் நேற்று 4 மணி நேரம் மழை பெய்தது. புதுகை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்து வருவதால் அனைத்து வாய்க்கால்களிலும் நீர்வரத்து காணப்படகிறது.

Related Stories: