ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் இன்று துவங்கியது: ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் 4 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்

ஈரோடு: ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் இன்று துவங்கியது. இதில் 4 ஆயிரம் இளைஞர்கள் கலந்துகொண்டனர். இந்திய ராணுவத்தில் சோல்ஜர், சோல்ஜர் டெக்னிக்கல், அம்யூனிசன், ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் கிளர்க், ஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிரேட்ஸ்மென் ஆகிய பணியிடங்களுக்கு ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் ஆள்சேர்ப்பு முகாம் இன்று (22ம் தேதி) முதல் செப். 2ம் தேதி வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஈரோடு, கோவை, தருமபுரி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் ஆன்லைன் வாயிலாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் இதற்காக விண்ணப்பித்தனர். தேர்வில் பங்கேற்க தகுதி உள்ள 30 ஆயிரம் பேருக்கு மட்டும் இந்திய ராணுவம் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் இன்று காலை ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் துவங்கியது. முதல்நாள் முகாமில் பங்கேற்க கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முகாம் துவங்கும் நாளுக்கு முன்பாகவே நேற்று காலை முதலே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இளைஞர்கள் ஈரோட்டிற்கு வர துவங்கினர். இவர்களை முகாம் நடைபெறும் இடத்திற்கு வெளியே உள்ள விளையாட்டு திடலில் ராணுவ அதிகாரிகள் ஓய்வெடுக்க வைத்து, முகாம் தொடர்பான விதிமுறைகளை தெரிவித்தனர். அனுமதி சீட்டு இல்லாதவர்கள், உடம்பில் டாட்டூஸ்(பச்சை) குத்தியவர்களை போட்டியில் பங்கேற்க அனுமதி இல்லை எனக்கூறி வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு முகாம் கர்னல் ஆர்.ஜே.ரானே தலைமையில் ஆள்சேர்ப்பு துவங்கியது. முன்னதாக தேர்வர்களை வரவழைத்து மைதானத்தில் 400 மீட்டர் கொண்ட ஓடுதளத்தில் 4 ரவுண்ட்(1600 மீட்டர்) ஓட வைக்கப்பட்டனர். இதில் சிலர் ஓட முடியாமல் 2வது, 3வது ரவுண்டிலேயே விலகினர். சிலர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு முகாமில் இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். நான்கு ரவுண்டையும் 5 நிமிடம் 30 விநாடியில் ஓடி கடந்தவர்களை முதல் பிரிவாகவும், 5 நிமிடம் 31 விநாடி மற்றும் 5 நிமிடம் 45 விநாடிகளில் கடந்து வந்தவர்களை இரண்டாவது பிரிவாகவும் தேர்வு செய்தனர். இந்த நேரத்திற்கு பிறகு வந்தவர்களை முகாமில் பங்கேற்க அனுமதி இல்லை என ராணுவத்தினர் வெளியேற்றினர். இதில் சில இளைஞர்கள் அதிகாரிகளை கெஞ்சிக் கேட்டும், விதிமுறைகளை எடுத்துக்கூறி அவர்களை அதிகாரிகள் வெளியேற்றினர்.

இதைத்தொடர்ந்து, உடல் திறனறிதல் தேர்வும், தகுதி தேர்வும் நடந்தது. இதில், நீளம் தாண்டுதல், உடல் நிலை தன்மை (ஜிக்-ஜாக்), கம்பியில் உடலை மேல் இழுத்தல் (புல்-அப்ஸ்) போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் தேர்வாகினர். இதையடுத்து உயரம், கால்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆவணங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, கையெழுத்து சரிபார்ப்பு போன்றவை நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்டவர்கள் தேர்வாகினர். பின்னர் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த முகாமில் அனைத்து உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கோவையில் அக்டோபர் மாதம் 27ம் தேதி நடக்கும் எழுத்து தேர்வுக்கான நுழைவு சீட்டினை ராணுவ அதிகாரிகள் வழங்கினர். எழுத்து, மருத்துவ தேர்வில் தேர்ச்சி பெறுவர்கள் மட்டுமே பணியில் சேர முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: