ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்; தினமும் குடும்ப உறுப்பினர்கள் 30 நிமிடம் சந்திக்க அனுமதி... சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். இதனிடையே ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய சிபிஐயின் மனுவில் 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க  சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.    

ப. சிதம்பரம் நேற்று அதிரடியாக கைது

பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு அதிரடியாக கைது செய்தது. 27 மணி நேர தலைமறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீடு திரும்பியதும், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றனர். அவரிடம். சிபிஐ தலைமை அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற கூண்டில் ஏற்றப்பட்டார் ப.சிதம்பரம்.ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கியது. சிபிஐ தரப்பில் துஷர் மேத்தா தனது வாதத்தை தொடங்கினார். ப.சிதம்பரத்துக்கு INS மீடியா வழக்கில் உள்ள தொடர்பு குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

((சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கும் மனு மீதான தீர்ப்பு 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு))

இரு தரப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சிதம்பரத்துக்கு ஜாமின் கோரும் மனு மீதும், சிபிஐயின் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் மனு மீதும் நீதிபதி 30 நிமிடம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரத்துக்கு 4 நாள் சிபிஐ காவல்

பின்னர் நீதிபதி தீர்ப்பு; ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்துக்கு  26-ம் தேதி வரை நிபந்தனையுடன் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தினமும் குடும்ப உறுப்பினர்கள் 30 நிமிடம் சிதம்பரத்தை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும். ப.சிதம்பரத்தின் மாண்பை குறைக்கும் வகையில் சிபிஐ நடந்துக்கொள்ளக்கூடாது என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். ப.சிதம்பரத்துக்கு தேவையான உடைகளை வெளியில் இருந்து எடுத்துவர அனுமதி உண்டு. 48 மணி நேரத்திற்கு ஒரு முறை சிதம்பரத்தை மருத்துவ பரிசோதனை நடத்த எனவும் கூறியுள்ளது.

Related Stories: