ஐ.என்.எஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 அரசு அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை : ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் காரச்சார வாதம்

டெல்லி: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளனர். ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

ப. சிதம்பரம் நேற்று அதிரடியாக கைது

பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு அதிரடியாக கைது செய்தது. 27 மணி நேர தலைமறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீடு திரும்பியதும், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றனர். அவரிடம். சிபிஐ தலைமை அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சிபிஐ தலைமை அலுவலகத்தில் உள்ள தரைதளம் மற்றும் 4வது தள அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது, பொருளாதார குற்றப்பிரிவினர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற கூண்டில் ஏற்றப்பட்டார் ப.சிதம்பரம்.ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கியது. சிபிஐ தரப்பில் துஷர் மேத்தா தனது வாதத்தை தொடங்கினார். ப.சிதம்பரத்துக்கு INS மீடியா வழக்கில் உள்ள தொடர்பு குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

 

இதையடுத்து சிதம்பரம் தரப்பில் கபில்சிபல் வாதத்தை துவக்கினார்.

கபில்சிபல் : இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கபில்சிபல் : இந்த வழக்கில் பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கபில்சிபல் : உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி விசாரணை முடிவடைந்துவிட்டது. இதனால் ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபம் என்ன இருக்கிறது?

கபில்சிபல் : எனவே சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.

கபில்சிபல் : ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள். விசாரிக்கும் தேவை இருந்தால் மீண்டும் அழைத்திருக்கலாம்.

கபில்சிபல் : சி.பி.ஐ. அழைப்பை சிதம்பரம் ஒருபோதும் நிராகரித்ததில்லை.

கபில்சிபல் : இதெல்லாம் நடந்துள்ளது என சி.பி.ஐ கூறுவதெல்லாம் சத்திய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது அல்ல, 2018 ஜூன் மாதம் நடந்த விசாரணை புத்தகத்தை சமர்ப்பியுங்கள், ஒத்துழைப்பு தந்தாரா இல்லையா என பார்க்கலாம்.

கபில்சிபல் : நேற்று இரவு விசாரிக்க வேண்டுமென சி.பி.ஐ சொன்னது , ஆனால் 12 கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளார்கள், இப்போதும் கூட விசாரிக்க வேண்டுமென சொல்கிறார்கள் ஆனால் அவர்களிடம் கேள்விகளே இல்லை.

கபில்சிபல் : நேற்று சி.பி.ஐ சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

(((சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளை கபில்சிபல் நீதிபதியிடம் கொடுத்தார்))

கபில்சிபல் : 12 கேள்விகளும் உங்கள் முன் உள்ளது, இவை அனைத்துக்கும் சிதம்ப்ரம் பதில் கூறியுள்ளார். எப்படி ஒத்துழைப்பு தரவில்லை என கூறலாம்

கபில்சிபல் : 2017-ல் வழக்கு பதிவு செய்த போது சிதம்பரத்திடம் விசாரித்திருக்கலாம்.2018-ல் விசாரணைக்கு அழைத்த போது கூட விசாரித்திருக்கலாம்.ஆனால் எதையுமே செய்யவில்லை

கபில்சிபல் :  சிதம்பரம்பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாக கூறினார்கள் ; முன் ஜாமின் மனு மீது 7 மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு கொடுக்கப்பட்டது ; இதுதான் பாதுகாப்பு வளையமா ?

கபில்சிபல் : வழக்கு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது எல்லாம் ஆதாரமில்லை, விசாரணைக்கு உதவும் அம்சங்களே ; அதே நேரத்தில் சிதம்பரத்தை நடத்திய விதம் கடும் எதிர்ப்புக்குரியது.

கபில்சிபல் : சிதம்பரத்தை மட்டுமே குறிவைக்கிறது சிபிஐ.ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி கொடுத்தது தனிப்பட்ட முடிவல்ல

கபில்சிபல் : சாதாரண நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கியவர் தான் நிதியமைச்சராக இருந்த சிதம்பரம்.

ஒப்புதலுக்கு அவர் பொறுப்பேற்க இயலாது.

கபில்சிபல் : ஒப்புதல் வழங்கிய 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை இல்லை.சிபிஐ கூறுவது எல்லாம் வேத வாக்கு அல்ல.

கபில்சிபல் : பல ஆவணங்கள் உள்ளதாக கூறுகிறார்கள்.சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள்..

கபில்சிபல் : 24 மணி நேரமாக சிதம்பரத்தை தூங்கவிடவில்லை

கபில்சிபல் : புகார் எழுந்து 10 ஆண்டுகளுக்குப் பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

கபில்சிபல் : 12 கேள்விகள் சிதம்பரத்திடம் கேட்கப்பட்டுள்ளன. அதில் 6 கேள்விகளுக்கு ஏற்கனவே அவர் பதிலளித்துள்ளார்

ப. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முடித்த பின்பு, அபிஷேக் மனு சிங்வி வாதங்களை தொடங்கினார்.

அபிஷேக் மனு சிங்வி : கைது செய்வது என்பது கட்டாயமல்ல, மொத்த வழக்கே இந்திராணி முகர்ஜி சொன்னதன் அடிப்படையில் தொடரப்பட்டதுதான்.

அபிஷேக் மனு சிங்வி : இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்து நான்கு மாதம் கழித்தே சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

அபிஷேக் மனு சிங்வி : இந்திராணி அப்ரூவரவாக மாறியதால் இந்த கைது நடவடிக்கை,ஆனால் அப்ரூவராக மாறி தற்போது அவர் சொன்னதை , 2018லேயே சொல்லி உள்ளார்

அபிஷேக் மனு சிங்வி : கேள்விகளுக்கு பதில் தராமல் தப்பிக்கிறார் என்ற காரணத்துக்காக மட்டுமே சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அபிஷேக் மனு சிங்வி : ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்ள வைப்பதற்கான கருவியல்ல காவலில் எடுத்து விசாரிக்கும் முறை.

அபிஷேக் மனு சிங்வி : கேள்விகளுக்கு பதில் தர மறுக்கிறார் என்பதற்கெல்லாம் காவலில் எடுத்து விசாரிக்க கோரலாமா ?

அபிஷேக் மனு சிங்வி : வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் தான் கைது நடவடிக்கை வேண்டும்.இஷ்டம் போல் கைது செய்வது ஒருபோதும் கூடாது .

அபிஷேக் மனு சிங்வி : விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் தான் ஒத்துழைப்பு தரவில்லை என அர்த்தம் ; விசாரணைக்கு ஆஜராகி கேள்விகளுக்கு பதில் தரவில்லை என்பது ஒத்துழைப்பு தரவில்லை என்று அர்த்தமல்ல

அபிஷேக் மனு சிங்வி : அந்நிய முதலீட்டு மேம்பாட்டு ஆணைய ஒப்புதல் 6 செயலாளர்களால் வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆனார். நடந்தவற்றை அவர் ஒப்புக் கொண்டும் உள்ளார்.

அபிஷேக் மனு சிங்வி : சாட்சியங்களை அழிக்க முயன்றார் என்ற குற்றச் சாட்டை சி.பி.ஐ வைக்கவில்லை, அப்படிப்பட்ட நிலையில் காவலில் எடுத்து விசாரிப்பது தேவையற்றது.

அபிஷேக் மனு சிங்வி :1. ஒத்துழைப்பு தராமை

2. சாட்சியங்களை அழிக்க முயல்தல்

3. தப்பிச் செல்லுதல்

அபிஷேக் மனு சிங்வி :இந்த மூன்று விஷயங்களுமே சிதம்பரத்தின் வழக்கில் இல்லை எனும் போது கைது நடவடிக்கை அவசியமற்றது.

அபிஷேக் மனு சிங்வி :ஜுன் 2018-க்குப் பின் சிதம்பரத்தை விசாரணைக்கு அழைக்காத சிபிஐ, தற்போது கைது செய்ய முனைப்பு காட்டுவது ஏன்?

அபிஷேக் மனு சிங்வி :பணத்திற்காக பெற்ற மகளையே கொன்ற பெண்ணின் வாக்கு மூலத்தை வைத்து நாட்டின் மூத்த தலைவரை எப்படி கைது செய்தீர்கள்?

Related Stories: