மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை 7 வருடமாக குறைப்பு: அடுத்த ஆண்டு முடிவு

டெல்லி: மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரி தற்போது அதை 7 வருடமாக குறைத்துள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். கேரளாவைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக, விளையாடிய போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து வழக்கை நடத்தி, குற்றமற்றவர் என்று நிரூபித்தார். ஆனால், பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து கோர்ட்டில் முறையிட்டார். இந்நிலையில் இவருடன் சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அஜித் சண்டிலா, அங்கித சவான் ஆகியோருக்கும் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி, சுப்ரீம் கோர்ட், ஸ்ரீசாந்த்தின் தண்டனையை குறைப்பது குறித்து பரிசீலிக்கும் படி, உத்தரவிட்டது.

தற்போது உச்சநீதிமன்றத்தால் பிசிசிஐ-க்கு விசாரணை அதிகாரியாக முன்னாள் நீதிபதி டிகே ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடையை 7 வருடங்களாக குறைத்தார்.

இதுகுறித்து பிசிசிஐ., அதிகாரி ஜெயின் கூறுகையில்,‘கடந்த 13.09.13 முதல் 7 ஆண்டுகளுக்கு பிசிசிஐ., நடத்தும் எந்தவித கிரிக்கெட் போட்டியிலும், ஸ்ரீசாந்த் பங்கேற்க முடியாது. அவருக்கு பிசிசிஐ., ஒழுங்கு கமிட்டி விதித்த தடைக்காலம் முடிவுக்கு வருகிறது.’ என்றார். ஸ்ரீசாந்துக்கு 2013-ல் இருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் அவர் மீதான தடை முடிவடைகிறது. அதன்பின் அவர் விளையாடலாம். ஆனால், ஸ்ரீசாந்திக்கு தற்போது 36 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: