நான்வெஜ் மேட்டர்! ஆனா, எல்லாரும் தெரிஞ்சுக்கணும்!!

டாக்டர் வி.ராஜேந்திரன், முன்னாள் இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை

இறைச்சியில் எத்தனை வகை?

ஆதிமனிதன் இறைச்சிதான் உண்டான் என்பது அறிவியல் உண்மை. வேட்டை சமூகமாக இருந்த காலத்தில் வேறென்னதான் உண்டிருப்பான்? காலப்போக்கில் இறைச்சி பற்றிய தவறான கருத்துகள் உருவாகி, அந்த உணவை பலர் புறக்கணிக்கிறார்கள். புரதப் பற்றாக்குறை, ரத்தச்சோகை போன்ற மருத்துவக் குறைபாடுகள் அதிகரித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.உலகநாடுகள் பெரும்பாலானவற்றில் இறைச்சிதான் முதன்மை உணவு. ஆடு, மாடு, பன்றி, கோழி என்று இந்த நான்குவகை இறைச்சியே மக்களின் உணவாக இருக்கின்றன. இவற்றைத் தவிர வேறு சில விலங்கினங்களின் இறைச்சியை உண்ணும் வழக்கம் உண்டு.

ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், ஹாலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் குதிரை இறைச்சி உண்கிறார்கள். அரேபிய நாடுகளில் ஒட்டகம், ஆஸ்திரேலியாவில் கங்காரு என்று அந்தந்த நாட்டின் தட்பவெட்பமும் அவர்கள் உண்ணக்கூடிய இறைச்சி எதுவென்பதை தீர்மானிக்கிறது. ஜெர்மனி, சுவீடன், தைவான் உள்ளிட்ட பதினான்கு நாடுகள் ஆஸ்திரேலியாவிலிருந்து கங்காருவை இறக்குமதி செய்து உண்கிறார்கள்.ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் முயல் இறைச்சி உண்பதை அந்நாட்டு அரசே ஊக்கப்படுத்துகிறது. பிரேசில், ஈக்குவடார், டான்சானியா ஆகிய நாடுகளிலும் ‘முயல் 65’ சக்கைப்போடு போடுகிறது.

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் நாகா இன மக்கள் நாய் இறைச்சியை விரும்பி சுவைக்கிறார்கள். அருணாச்சலப் பிரதேசத்து மலைவாழ் மக்கள் மிதுன், யாக் போன்ற விலங்கினங்களை சாப்பிடுகிறார்கள். மிசோரத்தில் குரங்கு இறைச்சிக்கு செம டிமாண்டு.

துருவப் பகுதிகளில் வசிக்கும் எஸ்கிமோக்கள் சீல் மற்றும் துருவக்கரடிகளை கொன்று சாப்பிடுகிறார்கள். மத்திய ஆப்பிரிக்காவில் சில பழங்குடியினர் காண்டாமிருகம், நீர்யானை போன்றவற்றை வேட்டையாடி உண்கிறார்கள். நம்மூரிலேயே கூட நாடோடி மக்கள் அணில், பூனை, எலி, கீரிப்பிள்ளை போன்ற சிறு பிராணிகளை வலைபோட்டு அடித்து சாப்பிடுவதை கவனித்திருக்கலாம். நரிக்குறவர்களுக்கு நரி பிடித்தமான உணவு.

ஆட்டுக்கறியில் எந்தப் பகுதி பெஸ்ட்?

மட்டன் என்று நாம் சொல்லும் இறைச்சி செம்மறி ஆட்டின் மாமிசம். வெள்ளாட்டு கறியை செவான் என்று சொல்ல வேண்டும். மட்டன் வாங்குபவர்கள் பலரும் தொடைக்கறிதான் வேண்டுமென்று கடையில் கேட்டு வாங்குகிறார்கள். தொடைக்கறிதான் ருசிக்கும் என்பது பொதுப்புத்தியில் விளைந்த ஒரு தவறான கருத்து. தசைகளைப் பொறுத்தவரை எவையெல்லாம் அதிகம் உழைக்கும் தன்மை கொண்டதோ, அப்பகுதியை கறியாகச் சமைத்து உண்டால் சுவை இருக்காது. அதில் நார்ச்சத்துதான் கூடுதலாக இருக்கும். ஆட்டின் உடலில் இடுப்புக்கு மேலே வால்பகுதிக்கு முன்னால் உள்ள தசைகள் எவ்வித அசைவும் இல்லாமல் குறைந்தளவு உழைப்பு உடையதாக இருக்கும். அப்பகுதியை சமைத்தால் அவற்றின் ருசி கூடுதலாக இருக்கும். பொதுவாக இறைச்சி உணவைப் பொறுத்தவரை எண்ணெயில் பொரித்து எடுப்பது, வறுத்து எடுப்பது போன்றவற்றை தவிர்க்கலாம். வேகவைத்த கறி நல்லது.

ஏன் இறைச்சி உண்ண வேண்டும்?

சராசரியாக ஆணுக்கு 55 கிராம் அளவிலும், பெண்ணுக்கு 45 கிராம் அளவிலும் புரதம், நாள் ஒன்றுக்கு தேவைப்படுகிறது. மனித உடலுக்கு புரதச் சத்துகளில் உள்ள அமினோ அமிலங்கள் மிகவும் இன்றியமையாதது. இறைச்சியைப் பொறுத்த மட்டில் அமினோ அமிலங்கள் எளிதில் ஜீரணமாகக் கூடியவை ஆக இருப்பதால் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.இறைச்சியால் இதயம் தொடர்பான நோயும், புற்றுநோயும் வருகிறது என்று தவறாக வாட்ஸப் போன்ற இடங்களில் தகவல்களை நீங்கள் வாசித்திருக்கலாம். அது முற்றிலும் பொய். ஆட்டு இறைச்சியைக் காட்டிலும், மாட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சியில் உள்ள செலினியம் தாதுப் பொருட்கள் மேற்கண்ட நோய்களை கட்டுப்படுத்த வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

வைட்டபின் பி பிரிவைச் சேர்ந்த தயாமின் எனும் சத்து, நரம்பு மண்டல வளர்ச்சிக்கு அவசியம். மற்றொரு பி வைட்டமின் சத்தான நயாசின் உடம்பிலுள்ள கொழுப்பு மற்றும் மாவுச்சத்தை கலோரியாக மாற்றுகிறது. இதனால் கொழுப்புச் சத்து உடலில் சேர்வது தடுக்கப்படும். இறைச்சியில் இந்த இரண்டு சத்துகளும் தேவையான அளவில் இருக்கின்றன. இறைச்சி உண்பதால்தான் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது என்பது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட ஒரு கருத்து.

Related Stories: