ஜப்பான் ஓபன் பேட்மின்டன்: 2வது சுற்றில் சாய் பிரனீத்

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் சாய் பிரனீத் தகுதி பெற்றார். டோக்கியோவில் நடைபெறும் இந்த தொடரின் முதல் சுற்றில் உள்ளூர் நட்சத்திரம் கென்டோ நிஷிமோட்டோவுடன் (10வது ரேங்க்) நேற்று மோதிய சாய் பிரனீத் (23வது ரேங்க்) 21-17 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் சிறப்பாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 21-17, 21-13 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா - சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி இணை 21-14, 21-19 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் லிண்டா எப்ளர் - மார்வின் செய்டல் ஜோடியை வீழ்த்தியது.

நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக பி.வி.சிந்து களமிறங்குகிறார். சமீபத்தில் நடந்த இந்தோனேசியா ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்ற சிந்து, ஜப்பான் ஓபனில் தங்கப் பதக்கத்தை முத்தமிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: