ஒருநாள் போட்டிகளில் விடைபெறுகிறார் மலிங்கா

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.2004ம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமாகிய மலிங்கா (35 வயது), கடந்த 2010ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் 30 டெஸ்டில் 101 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்த அவர், சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் இலங்கை அணி ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

வங்கதேச அணியுடன் நாளை மறுநாள் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியே அவர் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கும். மலிங்கா இதுவரை 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட் (சிறப்பு 6/38) வீழ்த்தியுள்ளார். 2007 ஐசிசி உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்காக டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: