கூட்டத்தொடரை நடத்த விடாமல் தடுத்ததாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் உட்பட 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

* குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்

* ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு

திருமலை: ஆந்திர சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்தவிடாமல் தடுத்ததாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் உட்பட 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9வது நாளாக நேற்று நடைபெற்றது. அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது அறிவித்தபடி எஸ்சி, எஸ்டி, பிசி,  மைனாரிட்டி பிரிவை சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒய்எஸ்ஆர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 75 ஆயிரம் வழங்க முடிவு செய்திருப்பதாக  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.  அப்போது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ ராமாநாயுடு, ‘‘தேர்தல் நேரத்தில் எஸ்சி, எஸ்டி, பிசி, மைனாரிட்டி பிரிவை சேர்ந்த 45 வயது மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 2 ஆயிரம் பென்ஷன் வழங்குவதாக தெரிவித்தீர்கள். தற்போது வேறு திட்டத்தை அறிவிக்கிறீர்கள். முதலில் உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தெளிவான முடிவைக் கொண்டு வாருங்கள்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து தேர்தலின்போது ஜெகன்மோகன் ரெட்டி பேசிய வீடியோ காட்சிகள் சட்டப்பேரவையில் அமைக்கப்பட்ட தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பட்டது.  இதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் எம்எல்ஏக்களுக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்தவிடாமல் தடுத்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் அச்சண் நாயுடு, நிம்மல ராமாநாயுடு, பூச்சைய்ய சவுத்ரி ஆகிய மூன்று எம்எல்ஏக்களை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் போக்கண்ண ராஜேந்திரநாத் முன்மொழிந்தார். இதையடுத்து துணை சபாநாயகர் கோணா ரகுபதி, அச்சண் நாயுடு உட்பட 3 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்களை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார்.

ஆனால் தொடர்ந்து அவையில் இருந்து கூச்சலிட்டப்படி சபாநாயகர் இருக்கை அருகே அவர்கள் 3 பேரும் வர முயன்றதால்  அவை காவலர்கள் மூலமாக குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வெளியேற்றப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 எம்எல்ஏக்களை மீண்டும் அவையில்  சேர்க்க வேண்டுமென துணை சபாநாயகரை தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கண்டா ஸ்ரீனிவாஸ், கரணம் பலராம் ஆகியோர் மனு கொடுத்தனர்.  

இதனை ஏற்ற துணை சபாநாயகர் கோணா ரகுபதி, 3 பேர் சஸ்பெண்ட் விவகாரத்தில் ஆளுங்கட்சியினர் கூறும் முடிவை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: