லண்டன்: இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் போரீஸ் ஜான்சன் வெற்றி பெற்றதை அடுத்து அவர் பிரதமராக பொறுப்பேற்கிறார். பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை காரணமாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரே பிரதமராகவும் பொறுப்பேற்பார். இந்த தேர்தலில் முன்னாள் லண்டன் மேயர் போரீஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர் ஜெராமி ஹன்ட் ஆகியோர் போட்டியிட்டனர். கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களின் தபால் ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டன.