சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ரூ.565 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரப்பப்படும். இதனால் சுற்றியுள்ள நிலங்கள் பாசன வசதி பெறும்.அத்துடன் சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், அங்கு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது. அதே நேரத்தில் முதல்வரின் அறிவிப்பு சேலம், நாமக்கல் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றாது. மேட்டூர் அணையின் உபரிநீரை திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.