திருமங்கலம் தனியார் பள்ளி வகுப்பறையில் புகுந்து பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை: மாணவர்கள் முன்னிலையில் கணவர் வெறிச்செயல்

திருமங்கலம்: திருமங்கலம் தனியார் பள்ளி வகுப்பறையில் புகுந்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியையை, அவரது கணவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் பஸ் நிலையம் அருகே தனியார் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரதிதேவி (32), கடந்த ஜூன் மாதம் ஆசிரியை பணியில் சேர்ந்தார். 8, 9ம் வகுப்பிற்கு சமூக அறிவியல் பாடம் எடுத்து வந்தார். இவரது கணவர் ராமநாதபுரம், ஓம்சக்தி நகரை சேர்ந்த குரு முனீஸ்வரன் (36). சிவில் இன்ஜினியர். சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஹர்ஷவர்தன் (5), ஹர்ஷவர்த்தினி (5) என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த ரதிதேவி, காரியாபட்டியில் உள்ள  பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். குரு முனீஸ்வரன் சேர்ந்து வாழ விரும்பி அடிக்கடி ரதிதேவியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், ஆசிரியை பணியில் சேர்ந்த ரதிதேவி, கணவருடன் செல்ல மறுத்து விட்டார். ஆத்திரமடைந்த குரு முனீஸ்வரன், 2 நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து  சொந்த ஊரான ராமநாதபுரம் வந்தார். உறவினர்கள், நண்பர்களிடம் பிரச்னை குறித்து பேசும்போது அவர்கள், ‘‘ரதிதேவி இனி உன்னுடன் சேர்ந்து வாழப்போவதில்லை’’ என தெரிவித்துள்ளனர்.மனைவி ரதிதேவியிடம், குரு முனீஸ்வரன் பேசியபோது, ‘‘ டார்ச்சர் கொடுத்தால் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பேன்’’ என்று மிரட்டியுள்ளார். இதில் மேலும் ஆத்திரத்திற்கு ஆளான குரு முனீஸ்வரன், ராமநாதபுரத்திலிருந்து டூவீலரிலேயே நேற்று மாலை 3.30 மணிக்கு ரதிதேவி பணியாற்றும் திருமங்கலம் தனியார் பள்ளிக்கு வந்தார்.

காவலாளி பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்தபோது, ரதிதேவியின் கணவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘‘வீட்டுச்சாவியை வாங்கிச் செல்ல வந்தேன்’’ என்றதால் அனுமதித்துள்ளார். 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ரதிதேவி பாடம் நடத்திக் கொண்டிருப்பதை அறிந்து, 3வது மாடியில் உள்ள வகுப்பறைக்கு கையில் ஹெல்மெட்டுடன் சென்றுள்ளார். அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து சத்தம் போட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில் ஹெல்மெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து,  மாணவர்கள் முன்னிலையிலேயே ரதிதேவியை ஒரு கையால் வளைத்துப்பிடித்து, திமிறியவரின் வயிறு, மார்பு என மாறி மாறி 30க்கும் அதிகமான தடவை சரமாரியாக குத்தினார். இதை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடினர். சத்தம் கேட்டு அக்கம்பக்க வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் திரண்டு வந்தனர். அதற்குள் வகுப்பறையிலேயே ரத்த வெள்ளத்தில் ஆசிரியை ரதிதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.அங்கிருந்தவர்கள், தப்பிச் செல்ல முயன்ற குரு முனீஸ்வரனை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிந்து, குரு முனீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறைக்குள் நடந்த இந்த பயங்கர கொலைச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: