பான் எண் மட்டும் குறிப்பிட்டால் போதாது பணம் டெபாசிட் செய்ய ஆதார் கட்டாயமாகிறது: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் டெபாசிட் செய்யவும் பான் எண்ணை மட்டும் குறிப்பிட்டு விட்டால் போதும் என்று நினைத்துவிடாதீர்கள். இனிமேல் ஆதார் எண்ணையும் சேர்த்து குறிப்பிட வேண்டும். இதற்கான உத்தரவை விரைவில் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் அதிக அளவில் ரூபாய் நோட்டுகள் (கரன்சி) பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்கப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வங்கியில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்யும்ன்போது மின்னணு கேஒய்சி, பயோமெட்ரிக் கருவி, ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் ஆதார் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக, நிதி மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்நிய செலாவணி வாங்கும்போது, தற்போது பான் எண்ணை குறிப்பிட்டால் போதும், இதேபோல், சொத்து வாங்கும்போதோ, விற்கும்போதோ சாதாரணமாக ஆதார் அல்லது பான் எண் குறிப்பிட்டால்போதும்.

இனிமேல் இதுபோதாது. வாங்கிய சொத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணை உறுதிப்படுத்துவது கட்டாயமாகிறது. எவ்வளவு பண பரிவர்த்தனை செய்தால் ஆதாரை உறுதிப்படுத்துவது கட்டாயம் என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முடிவு செய்ததும் அறிவிக்கப்படும். ஆண்டுக்கு வங்கியில் 20 லட்சம் முதல் 25 லட்சம் வரையில் பணம் எடுத்தாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ ஆதார் அடையாளத்தை உறுதிப்படுவது கட்டாயம் என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பல டெபாசிட்தாரர்கள் பண பரிவர்த்தனையின்போது தவறான பான் எண் குறிப்பிடுகின்றனர். இதனால், பணப் பரிவர்த்தனைகளை முறையாக கண்டறிய முடியவில்லை ஆதார் அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் போலியான பான் எண்ணை மட்டும் குறிப்பிட்டு தப்பிக்க முடியாது என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.

Related Stories: