மாற்றுத்திறனாளிக்கு உடனே மருத்துவ சீட் தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு: ஐகோர்ட் தீர்ப்பை ஏற்று உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: தொண்ணூறு சதவீதம் கண் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிக்கு மருத்துவ சீட் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என கூறி, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை  உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

நெல்லை மாவட்டம், தென்காசி மேலகரத்தை சேர்ந்தவர் ஜெ.விபின். இவருக்கு 75 சதவீத பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. இவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மாற்றுத்திறனாளிகள்  ஒதுக்கீட்டில் அகில இந்திய அளவில் 285வது இடம் பெற்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனை கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது. கல்லூரியில் சேர அவர் சென்றபோது, சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு குழு முன்பு ஆஜராகி சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்குமாறு விபினுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு குழுவினர் விபினை  பரிசோதித்து அவர் 90 சதவீத பார்வை திறன் குறைபாடு உள்ளவர் என சான்றிதழ் வழங்கியதுடன் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, 40 சதவீதத்துக்கு மேல் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவ சீட்  வழங்க முடியாது என்று கூறி விபினுக்கு எம்பிபிஎஸ் சீட் நிராகரிக்கப்பட்டது.

   இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு குழுவின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாணவர் விபின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்ற உத்தரவில்,” மாற்றுத்திறனாளி மாணவருக்கு மருத்துவ சீட்  மறுப்பது அதுகுறித்த அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே மனுதாரருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் உடனடியாக சீட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்  படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அதேப்போல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சுகாதாரத்துறை செயலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவில் அரசிடம் உரிய விளக்கம் பெற்று பதிலளிக்கவும்  நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் அருண்மிஸ்ரா மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் உத்தரவில்,” 90சதவீதம் கண் பார்வையிழந்த மாற்றுத்திறனாளி மாணவர் விபினுக்கு மருத்துவ சீட் ஒதுக்கீடு  செய்யும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீவிர ஆய்வு செய்து விசாரித்த பின்னர் தான் இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதற்கு எந்தவித இடைக்கால தடையும் விதிக்க முடியாது. இதில் உடனடியாக அந்த உத்தரவை அரசு  செயல்படுத்த வேண்டும். அதேப்போல் இந்த விவகாரத்தில் மருத்துவ கவுன்சில், மாணவருக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக எந்த ஆணையும் பிறப்பிக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை  தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டனர்.

Related Stories: