கொள்கை, கோட்பாடு, லட்சியம் என மூன்றும் இல்லாத தினகரனுக்கு மூன்று நாமம்தான் கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: டிடிவி தினகரன் ரிங் மாஸ்டர் போல செயல்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சிலம்பு சில்வர் மாபோ.சிவஞானத்தின்114-வது பிறந்தநாளையொட்டி தியாகராய நகரில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்கள் தூவி மரியாதையை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். டி.டி.வி.தினகரனை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார், தங்கத்தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவார் என்றால், அது குறித்து கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்றார். ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர் எனக் கூறினார்.

சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்றும் அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் எனவும் கூறினார். கொள்கை, கோட்பாடு, லட்சியம் என மூன்றும் இல்லாத தினகரனுக்கு மூன்று நாமம்தான் கிடைக்கும் என விமர்சித்தார். தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய யாரும் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டார்கள் என கூறினார். டி.டி.வி.தினகரனை கடுமையாக விமர்சித்து பேசுவது போல் நேற்று ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: