கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படாத தனியார் பள்ளிகள் 1 மாதத்துக்குள் விண்ணப்பிக்க மெட்ரிக். பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

சென்னை: கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படாத தனியார் பள்ளிகள் ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மெட்ரிக் பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் ஜூலை 1ம் தேதிக்குள் கட்டணம் நிர்ணயம் செய்ய விண்ணப்பிக்காத பள்ளிகள் பட்டியலை அனுப்புமாறும் சிஇஓக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணங்களை நிர்ணயம் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில், 2018- 19 ஆண்டு முதல் 2020-21 கல்வி ஆண்டுவரை தனியார் பள்ளிகள் வாங்க வேண்டிய கட்டணங்களை நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், அந்த கட்டணம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தது. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

விசாரணையின் போது, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட 3 மாத காலம் அவகாசம் வழங்கக்கோரி தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. அதனை மறுத்த நீதிபதிகள், 1 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்விக் கட்டண விவரத்தை இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட 7,800 தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை கட்டண நிர்ணயக் குழு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை, www.tamilnadufeecommittee.com என்ற இணையதளத்தில் புதிய கல்விக் கட்டண விவரத்தை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் தனியார் பள்ளிகள் வசூலிக்கிறதா என்பதை உறுதிசெய்து ஜூலை 1க்குள் அறிக்கை அனுப்பவும் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

இதையடுத்து, பல தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்காமல் இருப்பதாகவும், அந்த பள்ளிகள் உடனடியாக கட்டணம் நிர்ணயம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரிக் கல்வி இயக்குநரகத்தில், கட்டண நிர்ணய குழு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தின் முடிவில் அனைத்து தனியார் பள்ளி சிஇஓக்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு மாதத்திற்குள் கட்டணம் நிர்ணயம் செய்யாத தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர், அவர்களின் கட்டணம் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்காத பள்ளிகளின் பட்டியலை ஜூலை 1ம் தேதிக்குள் தயார் செய்து அதனை மெட்ரிக் பள்ளி இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: