சென்னை: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி எதிரொலியாக வரும் 28ம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி.தினகரன் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் தேர்தல் முடிவு 23ம் தேதி வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 38 நாடாளுமன்ற மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவும் வெளியிடப்பட்டது. இதில் திமுக 38 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்று மாபெரும் தோல்வியை சந்தித்தது. இதேபோல், அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த அமமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெரும் என கணிக்கப்பட்டது. ஆனால், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அமமுக தோல்வியையே சந்தித்தது. தகுதி நீக்க எம்.எல்.ஏக்களும் தங்களின் தொகுதிகளில் தோல்வியை சந்தித்தனர். பல இடங்களில் 4வது இடத்திற்கு அமமுக தள்ளப்பட்டது. இது டிடிவி.தினகரனுக்கும் அவரை நம்பி வந்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.