சென்னை: “இந்தியாவையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கிற பணியில் ராகுல் காந்தி தலைமையில் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இதை அறிந்து காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல, லட்சோபலட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகுவதை காங்கிரஸ் கட்சியினர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், அனுமதிக்க மாட்டார்கள். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த ஆறுதலை தருகிறது.