ஜனநாயகத்தை பாதுகாக்கிற பணியில் ராகுல் தலைமையில் தொடர்ந்து பணியாற்றுவோம்: காங் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: “இந்தியாவையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கிற பணியில் ராகுல் காந்தி தலைமையில் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகப் போவதாக செய்திகள்  வெளிவந்தன. இதை அறிந்து காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல, லட்சோபலட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகுவதை  காங்கிரஸ் கட்சியினர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், அனுமதிக்க மாட்டார்கள். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த  ஆறுதலை தருகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பேசிய மோடியின் வெற்றியினால் நாட்டு மக்களிடையே கணிசமான பகுதியினர் தங்களது பாதுகாப்பு குறித்து அச்சமும், பீதியும் கொண்டிருக்கிறார்கள். இந்தியா எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற கவலை  பலரை வாட்டி வதைத்து வருகிறது.இத்தகைய சூழலில் இந்திய மக்களை ஒன்றுபடுத்தி, நம்பிக்கையூட்டுகிற பணியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.பின்னடைவு தற்காலிகமானதே. இது வீழ்ச்சியல்ல. ஒரு சருக்கல்  தான். இதிலிருந்து மீண்டு எழுவோம். எனவே, காங்கிரஸ் தலைமை பொறுப்பை ராகுல்காந்தி தொடர வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும். இதன்மூலம் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வலிமையுடன் நடத்தி,  இந்தியாவையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கிற பணியில் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தொடர்ந்து பணியாற்றுவோம் என சூளுரை ஏற்போம்.

Related Stories: