சென்னை:தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களை நிரந்தரமாக பெருக்கும் வகையில் காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில், மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவித்தார்கள்.
இந்நிலையில் நேற்று தமிழக பாஜ டிவிட்டர் பக்கத்தில், ‘மத்திய தரைவழி கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கீழ் கண்டவாறு தெரிவித்துள்ளார்.‘தமிழ்நாட்டு மக்கள் எங்களை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் எங்கள் முதல் வேலை’ எனத் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்னைகள் முடிவுக்கு வரும். காவிரியுடன் கோதாவரி இணைக்கப்பட்டு விட்டால் தமிழ்நாட்டின் தென்கோடிவரை தண்ணீர் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.