சென்னை: தமிழகத்தை சேர்ந்த 6 பேரின் மாநிலங்களவை பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.250 எம்.பி.க்களை கொண்ட மாநிலங்களவையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த 18 உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் அதிமுகவை சேர்ந்த 12 பேரும், திமுகவை சேர்ந்த 4 பேரும் எம்.பி.க்களாக உள்ளனர். இதேபோல் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த இருவர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல், லட்சுமணன், திமுக உறுப்பினர் கனிமொழி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா ஆகிய 6 பேரின் பதவி காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. காலி இடங்களுக்கான புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி அதிமுகவால் அக்கட்சிக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர்களை எளிதாக தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவுக்கு தற்போது 123 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்.