மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த எம்பிக்கள் கூட்டத்தில் மக்களவை திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு

* குழு துணை தலைவர்-கனிமொழி * கொறடா- ஆ.ராசா * பொருளாளர்-எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த எம்பிக்கள் கூட்டத்தில் மக்களவை திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டார். குழு துணை தலைவராக கனிமொழி, கொறடாவாக ஆ.ராசா,  பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 37 பேர் வெற்றி பெற்றனர். இதில், வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர்கள் அண்ணா அறிவாலயம் வந்து திமுக தலைவர்  மு.க.ஸ்டாலினை சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றனர்.இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை  தாங்கினார். இந்த கூட்டத்தில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் மக்களவை திமுக குழுத் தலைவராக டி.ஆர்.பாலு, குழுத் துணைத் தலைவராக  கனிமொழி, கொறடாவாக ஆ.ராசா, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் தேர்வு செய்து நியமிக்கப்பட்டனர். மேலும் மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா, கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்து  நியமிக்கப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: பதினேழாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில், தமிழகத்தில்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொலைநோக்குடன் அமைத்த  மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, 38 தொகுதிகளில் 37 தொகுதிகளிலும், 22 சட்டமன்ற தொகுதிகளில் 13 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதியிலும், ஒரு சட்டமன்றத் தொகுதியிலும், வரலாறு திரும்புகிறது  என்று மகிழ்ந்திடும் வகையில்,  மகத்தான வெற்றியை வழங்கிய தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களுக்கும், இந்த வெற்றியை பெறுவதற்காக பாடுபட்ட திமுக நிர்வாகிகள்- தோழர்களுக்கும், கூட்டணிக் கட்சி தலைவர்கள்-தொண்டர்கள்  அனைவருக்கும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக்  கூட்டம் மனமார்ந்த நன்றியை பலநூறு முறை தெரிவித்துக் கொள்கிறது.  சரித்திரச் சிறப்பு வாய்ந்த இந்த சாதனை  வெற்றியை வையகமே வியந்து போற்றுகிறது. ‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்’ என்ற தனிப்பெரும் முழக்கத்தை முன்னிறுத்தி, திமுக தலைமையில்  அமைந்த கூட்டணிக்கு, தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 2 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 வாக்குகளை இந்தக்  கூட்டணிக்கு அளித்து, திசை திருப்ப முயன்றவர்களை செல்லுபடி இல்லாதவர்கள் என்றாக்கி, பெரியார்-  அண்ணா-தலைவர் கலைஞர் ஆகியோர் போற்றி வளர்த்து, பண்படுத்தியது திராவிட மண்ணான இந்தச் செம்மொழி  தமிழ்நாடு என்பதை அகில இந்திய அளவில் எவ்வித அய்யப்பாடும் இன்றி உணர்த்தியிருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களின் உன்னதமான உரிமைப் போர் உலகத் தமிழர் ஒவ்வொருவரையும் பெருமிதம் கொள்ள வைக்கிறது.

ஊடகவியலாளர்கள் - பத்திரிகையாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு நினைவில் கொள்ளத்தக்கது. இந்த உணர்ச்சிமிகு, உயர்வான காட்சியைக் காணவும், வாழ்த்தி மேலும்  வழிகாட்டவும், முத்தமிழறிஞர் கலைஞர் இல்லையே என்ற ஏக்கப்  பெருமூச்சு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் இரத்த நாளங்களிலும் நிறைந்து  இருக்கிறது. ஆனாலும் அவர் இருந்த இடத்தில் இருந்து, நாளும் நயம்பட உழைத்து, எங்களை எல்லாம் ஆக்கம் தரும் அரிய வழிநடத்தி-இந்தியாவே வியந்து போற்றும் தகுதிமிக்க  தலைமைப் பண்புடன், எஃகுத் தன்மை வாய்ந்ததொரு கூட்டணியை  அமைத்து - எங்களுக்காக ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும்,  ஒவ்வொரு திண்ணையிலும், காடுமேடு கழனி அனைத்திலும் அனல் பறக்கும் பிரசாரத்தில், அனுதினமும், அல்லும் பகலும் ஈடுபட்டு,  1971, 2004 நாடாளுமன்ற  தேர்தல்களில் தலைவர் கலைஞர் ஈட்டி தந்த மிகப்பெரிய வெற்றிகளுக்கு இணையான வெற்றியைப் பெற்ற-தன்மான தந்தைக்கேற்ற  தனிப் பெருமைமிக்க தனயனான, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக்  கூட்டம் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டிடவும், நாட்டில் உண்மையான  ஜனநாயகம் தழைத்தோங்கவும், சமூகநீதி மேம்படவும், சமத்துவம் போற்றப்படவும், மதச்சார்பின்மையைப்  பாதுகாத்திடவும்-அரசியல் சட்டம் அனைவருக்கும் அளித்துள்ள  அடிப்படை உரிமைகளை அச்சமின்றிப்  பெற்றிடவும், திமுக தலைவரின் சீரிய வழிகாட்டுதலில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஆக்கப்பூர்வமான முறையில் அயராது பணியாற்றிடவும், தலைவர் கலைஞர் இயற்றி  தந்திருக்கும் ஐம்பெரும் முழக்கங்களான “அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!  இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!  வன்முறை தவிர்த்து வறுமையை  வெல்வோம்! மாநிலத்தில்  சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி!”  என்பதை இதயத்தில் ஏந்தி, அவற்றையே வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகக் கொண்டு இலட்சியப் பயணம் மேற்கொண்டிடவும், ‘மக்களே நம் எஜமானர்கள்-மக்களே நமது மகேசர்கள்’ என்பதை மறவாமல்   நாள்தோறும் மக்கள் பணி  ஆற்றிடவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் உறுதியெடுத்துக் கொள்கிறது.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: