கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தாயை குத்தி கொன்ற மகன்: மண்ணிவாக்கத்தில் பயங்கரம்

சென்னை: கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கத்தில் கள்ளக்காதலை கைவிடாத தாயை ஆத்திரம் அடைந்த மகன் சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வண்டலூர் மண்ணிவாக்கம், கக்கன் தெருவை சேர்ந்தவர் அன்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவரது மனைவி பவானி (40). இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.படப்பை அடுத்த சோமங்கலத்தில், பவானி கட்டிட வேலை செய்தபோது மேஸ்திரி ராஜ்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மூத்த மகன் சம்பத் (22) தாயின் கள்ளத்தொடர்பை பலமுறை கண்டித்து வந்துள்ளார். எனவே பவானி வீட்டுக்கு வராமல் இருந்ததாக  கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மண்ணிவாக்கத்தில் பவானி  கள்ளக்காதலனுடன் பைக்கில் செல்வதை கண்டதும் சம்பத் அதிர்ச்சி அடைந்து, பைக்கில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதைப் பார்த்து கள்ளக்காதலன் பவானியுடன் பைக்கில் வேகமாக சென்று உள்ளார்.

 

அப்போது வேகத்தடையில் பைக் மோதி கள்ளக்காதலன், பவானி ஆகியோர் நிலைதடுமாறி விழுந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சம்பத் மறைத்து வைத்திருந்த கத்தியால் பவானியின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பவானி சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இதை பார்த்ததும் கள்ளக்காதலன் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.தகவலறிந்த ஓட்டேரி போலீசார் பவானியின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியுடன் நின்றிருந்த சம்பத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: