பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இந்து முன்னணி பிரமுகர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவொற்றியூர், நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜெயந்தி (35).  கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதே பகுதியில் நடந்து சென்றபோது 5 பேர் கும்பல் அவரை மடக்கி 2 சவரன் செயினை பறித்து சென்றனர்.  புகாரின்பேரில், சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் குறித்து விசாரித்து வந்தனர். அப்பகுதி சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கார்கில் நகரை சேர்ந்த  ரூபன் (27) மற்றும் அவனது கூட்டாளிகள் செயின் பறிப்பில் ஈடுபட்டது  தெரிந்தது. எனவே ரூபனை போலீசார் கைது செய்தனர்.

 ரூபன் கொடுத்த தகவலின்பேரில் அவனது கூட்டாளிகள் தனசேகர் (19)  பிரசாந்த் (19) கார்த்திக் (26) சதீஷ் (27) ஆகியோரையும் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். அவர்களிடம் இருந்து 15 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், முக்கிய குற்றவாளியான ரூபன் இந்து முன்னணி அமைப்பின்  முக்கிய நிர்வாகி என கூறப்படுகிறது. கோயில் குருக்களாக இருந்ததால்  நகைகள் அணிந்து கோயிலுக்கு வரும்  பெண் பக்தர்கள் குறித்து தனது கூட்டாளிகளிடம் தெரிவித்து தனியாக செல்லும்போது வழிப்பறியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: