உலகக்கோப்பையை வென்று இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிக்கப் போவதாக விராட் கோலி பேட்டி

டெல்லி: உலகக்கோப்பையை வென்று இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிக்கப் போவதாக விராட் கோலி சூளுரைத்துள்ளார்.உலகக்கோப்பைத் தொடரில் விளையாடும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதன்கிழமை இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. இதுதொடர்பாக மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மைதானம் மற்றும் சூழல்களைக் காட்டிலும், போட்டியின் போது உண்டாகும் அழுத்தத்தை கையாள்வதே முக்கியமானது எனத் தெரிவித்தார். பந்துவீச்சில் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் இரு தூண்களாக இருப்பார்கள் என்று கூறிய விராட் கோலி, இந்த உலகக்கோப்பையை, ராணுவ வீரர்களுக்காக கட்டாயம் வெல்லப் போவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் முந்தைய உலகக்கோப்பை தொடரை விட தற்போதைய தொடர் சவாலானதாக இருக்கும் எனவும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் கூட தற்போது வலுவாக உள்ளது என இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார். சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளோம் என கூறினார். உலகக் கோப்பை தொடரில் தோனி மிகமுக்கிய பங்காற்றுவார் எனவும், அவருடைய சிறிய செயல்பாடுகள் கூட போட்டியை மாற்றும் தன்மை கொண்டது என தெரிவித்தார். இந்திய அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்தினால், உலகக் கோப்பையை மீண்டும் வெல்ல முடியும் - இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

Related Stories: