சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவடைந்தாலும், 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19ம் தேதி நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.தமிழகத்தில், வேலூர் தொகுதியை தவிர 38 தொகுதிக்கான மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை (18ம் தேதி) நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவுகள் பொதுவாக அமைதியான முறையிலேயே நடந்து முடிந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார்.இந்த நிலையில், தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதிதான் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 32 நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.வழக்கமாக தேர்தல் முடிந்து, இதுபோன்று வாக்கு எண்ணிக்கைக்கு அதிக நாட்கள் இருந்தால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கொஞ்சம் தளர்த்தி அறிவிக்கும். அதன்படி, முதல்வர், அமைச்சர்கள் துறை சார்ந்த ஆய்வு கூட்டங்களை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் நடத்த அனுமதிக்கப்படும்.ஆனால், தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்ற தொகுதியான ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய தொகுதிகளில் வருகிற மே மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் கடந்த 10 நாட்களுக்கு முன் அறிவித்தது. அதன்படி, இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (22ம் தேதி) தொடங்குகிறது.தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறுவதால், மே 23ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.