சென்னை: சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா நேற்று நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடந்தது. சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இந்நிலையில் வட சென்னை மற்றும் பெரம்பூர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்கப்பட்டுள்ளன.