சென்னை: கைவிரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜி.வி.குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தருமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய கைவிரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் அருணாச்சலம் என்பவர் அளித்த பதில் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அருணாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஐஐடி பேராசிரியர் டி.மூர்த்தி பெயரில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை போலியானது என்று மனுதாரர் அருணாச்சலம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து இந்த வழக்கில் சீருடை பணியாளர் தேர்வாணையம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தேர்வாணையத்தின் ஆலோசகரான ஜி.வி.குமார் ஐ.ஐ.டி. பேராசிரியர் என்று டி.மூர்த்தி என்பவரை ஆணையத்திற்கு அறிமுகம் செய்தார். மூர்த்தியிடமிருந்து அறிக்கையும் பெற்றுத்தந்தார்.