சென்னை: விதிமீறி கோயில் பணியாளர் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் 1.50 கோடி லஞ்சம் பெறப்பட்டு இருப்பதாக கமிஷனரிடம் இணை ஆணையர் அறிக்கை அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உதவி கமிஷனர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த உதவி கமிஷனரிடம் விசாரணை நடத்த கமிஷனர் பணீந்திர ரெட்டி முடிவு செய்துள்ளார். சென்னை முகப்பேர் வெள்ளாள தெருவில் சந்தான சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உளளது. பொதுவாக, கோயில் நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்படுவது என்றால் அறநிலையத்துறை ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இந்த கோயில் நிர்வாகம் சார்பில் தன்னிச்சையாக பணியாளர்களை நியமனம் செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பணியாளர்களிடம் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு நியமனம் நடந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அறநிலையத்துறை கமிஷனருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவின் பேரில் சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்பிரியா தலைமையில் விசாரணை நடத்தினார்.