மக்களவை தேர்தலையொட்டி கண்காணிப்பு குழுவின் முறைகேடுகளை போட்டு கொடுப்பவர்களின் பெயர்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள் வழங்குவதை தடுக்க நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கண்காணிப்பு குழுவினருடன் போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிகப்படியான பணம் சிக்கினால் கண்காணிப்பு குழுவினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, கண்காணிப்பு குழுவில் உளவாளிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.