சின்னமனூர்: 2ம் போகம் நெல் சாகுபடியில் முதல் கட்டமாக குச்சனூரில் அறுவடை துவங்கியதால் விவசாயிகள் கதிர்களை வெட்டும் செய்யும் இயந்திரங்களுடன் விறுவிறுப்பாக வயல் களத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சின்னமனூர் பகுதியில் உள்ள நான்காயிரம் ஏக்கர் வயல் வெளிகளில் வருடம் இருபோகம் நெல் சாகுபடி விவசாயம் தொடர்ந்து நடந்து வருகிறது. நெல் வளர்ச்சிக்கு முக்கிய மூலதனமாக விளங்கும் முல்லைபெரியாற்று பாசனமே பிரதானமாக இருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் முதல்போகம் அறுவடை நிறைவான பிறகு ஒருவித தயக்கத்துடன் டிசம்பர் மாதம் 2ம் போகத்திற்கான சாகுபடிக்கு நாற்றாங்கால் பாவி நடவினை முடித்தனர்.
தற்போது இயற்கை சூழல்கள் ஓரளவிற்கு சரியாக இருந்ததாலும், வான் மழையும் பெய்ததால் கதிர்கள் நோய் தாக்கம் இல்லாமல் நன்றாக வளர்ந்து பொன்னிறத்தில் மாறி அறுவடைக்கு தயாராகி ஒரு வாரத்தில் துவங்கும் என்ற நிலை இருந்தது. தற்போது சின்னமனூர் பகுதியில் குச்சனூரில் கடந்த சில நாட்களாக அறவடை பணிகள் துவங்கி வேகமாக நடந்து வருகிறது. ஒரு ஏக்கருக்கு 61 கிலோ கொண்ட மூட்டைகள் 40 கிடைத்துள்ளது. வழக்கமாக இரண்டாம் போகத்தில் 34 முதல் 36 மூட்டைகள் தான் உற்பத்தியாக கிடைக்கும். நடப்பாண்டில் சற்று கூடுதலாக கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி அறுவடை இயந்திரங்களுடன் வயல்வெளிகளில் விவசாயிகள் மும்முரமாக நெல் கதிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக இருக்கின்றனர். மேலும் கதிர்களிலிருந்து பிரிக்கப்பட்ட நெல் மணிகள் மூட்டைகளாக தயார் செய்து வருகின்றனர். ஏற்கனவே தமிழக, கேரளா வியாபாரிகள் விவசாயிகளிடம் மார்க்கெட் நிலவரப்படி விலைபேசி முன்தொகை கொடுத்து வைத்திருந்தனர். அந்த வியாபாரிகள் அனைவரும் லாரிகளுடன் மாநில நெடுஞ்சாலைகளில் நிறுத்தி அறுவடை நெல் மூடைகளாக எடுத்து செல்கின்றனர். 40 மூடைகள் என்பது இடத்திற்கு தகுந்தாற்போல் ம றுபட்டு இன்னும் அதிகமாக 45 மூடைகளுக்கும் மேல் கிடைத்து வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி