தமிழகத்தில் முதல்முறையாக தையல் இல்லாத நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை : கிருஷ்ணகிரி அரசு மருத்துவர்கள் சாதனை

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் முதல்முறையாக தையல் இல்லாத நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை செய்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி அடுத்த சவுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் மனைவி சின்னப்பொண்ணு(56). இவர், கடந்த 2 வருடங்களாக கால் மற்றும் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 9ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சின்னபொண்ணுவை, தண்டு வட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தனசேகரன் பரிசோதனை செய்தார். அதில், முதுகு தண்டு வடத்தில் ஜவ்வு பகுதி பிதுங்கி, 2 கால்களின் நரம்பு பகுதியில் அழுத்தம் ஏற்பட்டதால் தீராத வலி ஏற்பட்டு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் அசோக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பரமசிவம், மயக்கவியல் நிபுணர் டாக்டர் பிச்சைதிருமலை மற்றும் எலும்பு முறிவு தண்டுவட அறுசை சிகிச்சை நிபுணர் டாக்டர் தனசேகரன் ஆகியோர், நவீன முறையில் தழும்பு, ரத்தப்போக்கு இல்லாமல், தையல் இல்லாத நுண்துளை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் அன்றே, அவர் வீட்டிற்கு புறப்பட்டு விட்டார். மேலும், பழையபடி அவர் வேலை செய்யவும் துவங்கியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் முதல்முறையாக அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்திருந்தால் 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவாகியிருக்கும். தற்போது கிருஷ்ணகிரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இந்த வசதி உள்ளதால், இலவசமாகவே இந்த சிகிச்சையை செய்து கொள்ளலாம். எனவே, முதுகு தண்டு வடத்தில் வலி உள்ளவர்கள், உடனடியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து பயன்பெறலாம்,’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: